பிள்ளையார் கதை
காப்பு
கரும்பும் இளநீரும் காரெள்ளுந் தேனும்
விரும்பும் அவல்பலவும் மேன் மேலருந்திக்
குணமுடையனாய் வந்து குற்றங்கள் தீர்க்கும்
கணபதியேயிக் கதைக்குக் காப்பு.
திருவிளங்கு மான்மருகா சேவல் தனிலேறி
வரமரன்றா னீன்றருளும் மைந்தா – முருகனுக்கு
முன்பிறந்த யானை முகவா உனைத் தொழுவேன்
என்கதைக்கு நீயென்றுங் காப்பு.
 
விநாயகர் துதி
திருவாக்குஞ் செய்கருமங் கைகூட்டுஞ் செஞ்சொல்
பெருவாக்கும் பீடும் பெருக்கும் – உருவாக்கும்
ஆதலால் வானோரும் ஆனை முகத்தோனைக்
காதலாற் கூப்புவர்தங் கை.
ஒற்றையணி மருப்பும் ஓரிரண்டு கைத்தலமும்
வெற்றி புனைந்த விழிமூன்றும் – பெற்றதொரு
தண்டைக்கால் வாரணத்தைத் தன் மனத்தில் எப்பொழுதும்
கொண்டக்கால் வராது கூற்று.
 
சப்பாணி
எள்ளு பொரிதேன் அவல் அப்பமிக்கும் பயறும் இளநீரும்
வள்ளிக்கிழங்கும் மாம்பழமும் வாழைப்பழமும் பலாப்பழமும்
வெள்ளைப்பாலும் மோதகமும் விரும்பிப்படைத்தேன் சந்நிதியில்
கொள்ளைக் கருணைக் கணபதியே கொட்டி அருள்க சப்பாணி.
சண்டப் பெருச்சாளி ஏறிச் சடைகொண்டு வையத் துலாவி
அண்டத்து அமரர் துதிக்க அடியார்க்கு அருளும் பிரானே
எண்திக்கும் அன்பர்கள் பார்க்க இணையற்ற பேரொளி வீசக்
குண்டைக் கணபதி நம்பி கொடுங்கையாற் சப்பாணி கொட்டே.
 
சரஸ்வதி துதி
புத்தகத் துள்ளுறை மாதே பூவில் அமர்ந்திடு வாழ்வே
வித்தகப் பெண்பிள்ளாய் நங்காய் வேதப் பொருளுக்கு இறைவி
முத்தின் குடை உடையாளே மூவுலகுந் தொழுது ஏத்துஞ்
செப்புக் கவித்த முலையாய் செவ்வரி ஓடிய கண்ணாய்
தக்கோலந் தின்னும் வாயாய் சரஸ்வதி என்னுந் திருவே
எக்காலமும் உன்னைத் தொழுவேன் இயல் இசை நாடகம் என்னும்
முத்தமிழ்க் கல்விகள் எல்லாம் முழுதும் எனக்கருள் செய்து என்
சித்தம் தனில் நீ இருந்து திருவருள் செய்திடுவாயே.
 
நூல்
மந்தர கிரியில் வடபால் ஆங்கு ஓர்
இந்துவளர் சோலை இராசமா நகரியில்
அந்தணன் ஒருவனும் ஆயிழை ஒருத்தியும்
சுந்தரப் புதல்வரைப் பெறுதல் வேண்டிக்
கடவுள் ஆலயமும் கடிமலர்ப் பொய்கையுந்
தடநிழற் பள்ளியுந் தாம்பல சமைத்துப்
புதல்வரைத் தருக எனப் பொருப்பு அரசு ஈன்ற
மதர்விழி பாகனை வழிபடும் நாளின்
மற்றவர் புரியும் மாதவங் கண்டு
சிற்றிடை உமையாள் சிவனடி வணங்கிப்     10
 
பரனே சிவனே பல்லுயிர்க்கு உயிரே
அரனே மறையவற்கு அருள்புரிந்து அருளென
அந்த அந்தணனுக்கு இந்த நற்பிறப்பில்
மைந்தரில்லை என்று மறுத்து அரன் உரைப்ப
எப்பரி சாயினும் எம்பொருட்டு ஒரு சுதன்
தப்பிலா மறையோன் தனக்கு அருள் செய்கென
எமையாளுடைய உமையாள் மொழிய
இமையா முக்கண் இறைவன் வெகுண்டு
பெண்சொற் கேட்டல் பேதைமை என்று
பண்சொற் பயிலும் பாவையை நோக்கிப்     20
 
பேதாய் நீ போய்ப் பிறவென மொழிய
மாதுஉமை யவளும் மனந்தளர்வு உற்றுப்
பொன்றிடு மானுடைப் புன்பிறப்பு எய்துதல்
நன்றல என்றே நடுக்கமுற்று உரைப்பக்
கறைமிடற்று அண்ணல் கருணை கூர்ந்து
பிறைநுதல் தலவற்கு நீ பிள்ளை யாகச்
சென்று அவன் வளர்ந்து சிலபகல் கழித்தால்
மன்றல் செய்தருள்வோம் வருந்தலை என்று
விடைகொடுத்து அருள விலங்கன் மாமகளும்
பெடைம யிற்சாயற் பெண்மக வாகித்        30
 
தார்மலி மார்பன் சதுர்மறைக் கிழவன்
சீர்மலி மனைவி திருவயிற்றில் உதித்துப்
பாவை சிற்றிலும் பந்தொடு கழங்கும்
யாவையும் பயின்ற இயல்பின ளாகி
ஐயாண்டு அடைந்த பின் அன்னையும் அத்தனும்
மையார் கருங்குழல் வாள்நுதல் தன்னை
மானுட மறையோற்கு வதுவை செய்திடக்
கானமர் குழலியைக் கருதிக் கேட்பப்
பிறப்பிறப் பில்லாப் பெரியோற்கு அன்றி
அறத்தகு வதுவைக்கு அமையேன் யான் என 40
 
மற்றவன் தன்னை உன் மணமகனாகப்
பெற்றிடல் அரிதெனப் பெயர்த்து அவர் பேச
அருந்தவ முயற்சியால் அணுகுவேன் யானெனக்
கருந்தட நெடுங்கண் கவுரி அங்கு உரைத்து
மருமலி கமல மலர்த்தடத்து அருகில்
தருமலி நிழல் தவச் சாலையது அமைத்துப்
பணியணி பற்பல பாங்கியர் சூழ
அணிமலர்க் குழல் உமை அருந்தவம் பயில
அரிவை தன் அருந்தவம் அறிவோம் யாமென
இருவரும் அறியா இமையவர் பெருமான்    50
 
மான் இடம் ஏந்தும் வண்ணமது ஒழிந்து
மானிட யோக மறைவன் ஆகிக்
குடையொடு தண்டு நற்குண்டிகை கொண்டு
மடமயில் தவம்புரி வாவிக் கரையில்
கண்ணுதல் வந்து கருணை காட்டித்
தண்நறும் கூந்தல் தையலை நோக்கி
மின்பெறு நுண்ணிடை மெல்லியலாய் நீ
என்பெறத் தவமிங்கு இயற்றுவது என்றலும்
கொன்றை வார்சடையனைக் கூட என்று உரைத்தலும்
நன்று எனச் சிரித்து நான்மறை யோனும்    60
 
மாட்டினில் ஏறி மான் மழுத் தரித்துக்
காட்டினிற் சுடலையிற் கணத்துடன் ஆடிப்
பாம்பும் எலும்பும் பல்தலை மாலையுஞ்
சாம்பரும் அணிந்து தலையோடு ஏந்திப்
பிச்சை கொண்டு உழலும் பித்தன் தன்னை
நச்சி நீ செய்தவம் நகைதரும் உமக்கெனப்
பூங்கொடி அருந்தவம் பூசுரன் குலைத்தலும்
ஆங்கு அவள் நாணமுற்று அணிமனை புகுதச்
சேடியர் வந்து செழுமலர் குழலியை
வாடுதல் ஒழிகென மனமிகத் தேற்றிச் 70
 
சிந்துர வாள்நுதற் சேடியர் தாம்போய்த்
தந்தை தாயிருவர் தாளினை வணங்கி
வாவிக் கரையில் வந்தொரு மறையோன்
பாவைதன் செங்கையைப் பற்றினான் என்றலும்
தோடு அலர்கமலத் தொடைமறை முனியை
ஆடக மாடத்து அணிமனை கொணர்க என
மாடக யாழ்முரல் மங்கையர் ஓடி
நீடிய புகழாய் நீ எழுந்து அருள் என
மைம்மலர்க் குழலி வந்து எனை அழைக்கில்
அம்மனைப் புகுவன் என்று அந்தணன் உரைத்தலும் 80
 
பொற்றொடி நீ போய்ப் பொய்கையில் நின்ற
நற்றவ முனியை நடாத்திக் கொணர்கெனச்
சிவனை இகழ்ந்த சிற்றறிவுடையோன்
அவனையான் சென்றிங்கு அழைத்திடேன் என்று
சிற்றிடை மடந்தையுஞ் சீறினள் ஆகி
மற்றைய மாதர் மதிமுகம் நோக்கி
நெற்றியிற் கண்ணுடை நிமலனுக்கு அல்லதென்
பொற்புஅமர் கொங்கை பொருந்துதற்கு அரிதால்
மானிட வேட மறையவன் தனக்கு
யான் வெளிப்படுவது இல்லையென்று இசைப்ப     90
 
மலையிடை வந்த மாமுனி தன்னை இணையடி
தொழுதல் இளையோர்க்கு இயல்பெனத்
தந்தையுந் தாயுந் தகைபெற மொழியச்
சிந்தை குளிர்ந்து சீறுதல் ஒழிந்து
தாய் சொல்மறுத்தல் பாவமென்று அஞ்சி
ஆயிழை தானும் அவனெதிர் சென்று
சுற்றிவந்து அவனடி சுந்தரி வணங்கி
மற்றவன் தன்னை மனையிற் கொணர்ந்து
ஆதியம் பகவற்கு அன்பன் ஆகும்
வேதியன் பழைய விருத்தன் என்றெண்ணி   100
 
ஆசனம் நல்கி அருக்கியம் முதலாப் பாத
பூசனைகள் பண்ணிய பின்னர்ப்
போனகம் படைத்துப் பொரிக்கறி பருப்புநெய்
ஆன்பால் மாங்கனி அழகிய பலாச்சுளை
தேன் கதலிப்பழம் சீர்பெறப் படைத்து
அந்தணன் தன்னை அமுது செய்வித்துச்
சந்தனங் குங்குமச் சாந்து இவை கொடுத்துத்
தக்கோலத்தொடு சாதிக் காயும்
கற்பூரத்தொடு கவின்பெறக் கொண்டு
வெள்ளிலை அடைக்காய் விளங்கிய பொன்னின்    110
 
ஒள்ளிய தட்டில் உகந்து முன்வைத்துச்
சிவனெனப் பாவனை செய்து நினைந்து
தவமறை முனிவனைத் தாளிணை வணங்கத்
தேனமர் குழலி திருமுகம் நோக்கி
மோனமாமுனி புன்முறுவல் காட்டிக்
கற்றைச் சடையுங் கரமொரு நான்கும்
நெற்றியில் நயனமும் நீல கண்டமும்
மானும் மழுவும் மலர்க்கரத்து இலங்கக்
கூன்மதி நிலவும் கொழித்திட முடிமேல்
வரந்தரு முதல்வன் மடமயில் காணக் 120
 
கரந்ததன் உருவங் காட்டி முன்நிற்ப
மரகத மேனி மலைமகள் தானும்
விரைவொடு அங்கு அவன் அடி வீழ்ந்து இறைஞ்சினளே
அரிஅயன் இந்திரன் அமரர் விஞ்சையர்
கருடர் கின்னரர் காய வாசியர்
ஏதமில் முனிவர் அவுணர் இராக்கதர்
பூதர் இயக்கர்கிம் புருடர் அலகை
சித்தர் தாரகை கந்தர்வர்கள் முதலாய்க்
கணிக்கரும் பதினெண் கணத்தில் உள்ளவரும்
மணிக்கருங் களத்தனை வந்தடைந்து அதன்பின்    130
 
மன்றல் அங் குழலிக்கு வதுவைநாள் குறித்துத்
தென்றல் வந்துஇலங்கு முன்றில் அகத்துப்
பொன்திகழ் பவளப் பொற்கால் நாட்டி
மாணிக்கத்தால் வளை பல பரப்பி
ஆணிப்பொன் தகட்டால் அழகுற வேய்ந்து
நித்தில மாலை நிரைநிரை தூக்கிப்
பக்திகள் தோறும் பலமணி பதித்துத்
தோரணம் நாட்டித் துகில் விதானித்துப்
பூரணப் பொற்குடம் பொலிவுற வைத்துத்
திக்குத் தோறும் திருவிளக்கேற்றிப்    140
 
பத்திப் படர்முளைப் பாலிகை பரப்பிக்
கன்னலுங் கழுகுங் கதலியும் நாட்டிப்
பன்மலர் நாற்றிப் பந்தர் சோடித்து
நலமிகு கைவலோர் நஞ்சணி மிடற்றனைக்
குலவிய திருமணக் கோலம் புனைந்தார்
வருசுரர் மகளிர் மலைமகள் தன்னைத்
திருமணக் கோலஞ் செய்தனர் ஆங்கே
எம்பிரானையும் இளங்கொடி தன்னையும்
உம்பர் எல்லாம் ஒருங்குடன் கூடிக்
கடலென விளங்கும் காவணந் தன்னில் 150
 
சுடர்விடு பவளச் சுந்தரப் பலகையி்ல்
மறைபுகழ்ந்து ஏத்த மகிழ்ந்து உடன் இருத்திப்
பறையொலியோடு பனிவளை ஆர்ப்ப
வதுவைக்கு ஏற்ற மறைவிதி நெறியே
சதுர்முகன் ஓமச் சடங்குகள் இயற்றத்
தறுகலன் ஒளிபொன் தாலி பூட்டிச்
சிறுமதி நுதலியைச் சிவன்கைப் பிடித்தபின்
அரிவலஞ் சூழ எரிவலம் வந்து
பரிவுடன் பரிமளப் பாயலில் வைகிப்
போதுஅணி கருங்குழற் பூவை தன்னுடனே   160
 
ஓதநீர் வேலிசூழ் உஞ்சையம் பதிபுக
ஏரார் வழியில் எண்திசை தன்னைப்
பாரா தேவா பனிமொழி நீ என
வருங்கருங் குழலாள் மற்றும் உண்டோ எனத்
திருந்து இழை மடந்தை திரும்பினாள் பார்க்கக்
களிறும் பிடியுங் கலந்து விளையாடல் கண்டு
ஒளிர்மணிப்பூணாள் உரவோடு உடனே
இவ் வகையாய் விளையாடுவோம் இங்கென
அவ்வகை அரனும் அதற்கு உடன் பட்டு
மதகரி உரித்தோன் மதகரி யாக 170
 
மதர்விழி உமைபிடி வடிவம் அதாகிக்
கூடிய கலவியில் குவலயம் விளங்க
நீடிய வானோர் நெறியுடன் வாழ
அந்தணர் சிறக்க ஆனினம் பெருகச்
செந்தழல் வேள்வி வேத ஆகமம் சிறக்க
அறம்பல பெருக மறம்பல சுருங்கத்
திறம்பல அரசர் செகதலம் விளங்க
வெங்கரி முகமும் வியன்புழைக்கையோடு
ஐங்கர தலமும் மலர்ப்பதம் இரண்டும்
பவளத்து ஒளிசேர் பைந் துவர்வாயும்  180
 
தவளக் கிம்புரித் தடமருப்பு இரண்டும்
கோடி சூரியர் போற் குலவிடு மேனியும்
பேழைபோல் அகன்ற பெருங்குட வயிறும்
நெற்றியில் நயனமும் முப்புரி நூலும்
கற்றைச் சடையுங் கனக நீண்முடியுந்
தங்கிய முறம்போல் தழைமடிச் செவியுமாய்
ஐங்கரத்து அண்ணல் வந்து அவதரித்தலும்
பொங்கரவு அணிந்த புண்ணிய மூர்த்தியும்
மங்கை மனமிக மகிழ்ந்து உடன் நோக்கி
விண்ணு ளோர்களும் விரிந்த நான் முகனும் 190
 
மண்ணு ளோர்களும் வந்து உனை வணங்க
ஆங்கு அவர் தங்கட்கு அருள் சுரந்து அருளித்
தீங்கது தீர்த்துச் செந்நெறி அளித்துப்
பாரண மாகப் பலகனி அருந்தி
ஏரணி ஆலின்கீழ் இனிதுஇரு என்று
பூதலந் தன்னிற் புதல்வனை இருத்திக்
காதல்கூர் மடநடைக் கன்னியுந் தானும்
மைவளர் சோலை மாநகர் புகுந்து
தெய்வ நாயகன் சிறந்து இனிது இருந்த பின்
வான வராலும் மானு டராலும்  200
 
கானமர் கொடிய கடு விலங்காலும்
கருவிகளாலுங் காலனாலும்
ஒரு வகையாலும் உயிரழியாமல்
திரம்பெற மாதவஞ் செய்து முன்னாளில்
வரம் பெறுகின்ற வலிமை யினாலே
ஐம்முகச் சீயம் ஒத்து அடற்படை சூழக்
கைம்முகம் படைத்த கயமுகத்து அவுணன்
பொன்னுலகு அழித்துப் புலவரை வருத்தி
இந்நிலத் தவரை இடுக்கண் படுத்திக்
கொடுந்தொழில் புரியுங் கொடுமை கண்டு ஏங்கி    210
 
அடுந்தொழிற் குலிசத்து அண்ணலும் அமரருங்
கறைபடு கண்டக் கடவுளைப் போற்றி
முறையிடக் கேட்டு முப்புரம் எரித்தோன்
அஞ்சலீர் என்று அவர்க்கு அபயங் கொடுத்தே
அஞ்சுகைக் கரிமுகத்து அண்ணலை நோக்கி
ஆனை மாமுகத்து அவுணனோடு அவன் தன்
சேனைகள் முழுவதுஞ் சிந்திடப் பொருது
குன்றுபோல் வளர்ந்த குறட்படை கூட்டி
வென்று வா என்று விடை கொடுத்தருள
ஆங்கு அவன் தன்னோடு அமர்பல உடற்றிப்  220
 
பாங்குறும் அவன்படை பற்றறக் கொன்றபின்
தேர்மிசை ஏறிச் சினங்கொடு செருவிற்
கார்முகம் வளைத்த கயமுகா சுரன்மேல்
ஒற்றைவெண் மருப்பை ஒடித்து அவன் உரத்திற்
குற்றிட எறிந்தான் குருதிசோர்ந் திடவே
சோர்ந்தவன் வீழ்ந்து துண்ணென எழுந்து
வாய்ந்த மூடிகமாய் வந்து அவன் பொரவே
வந்த மூடிகத்தை வாகனம் ஆக்கி
எந்தை விநாயகன் ஏறினன் இப்பால்
எறிந்த வெண்மருப்பு அங்கு இமைநொடி அளவில்  230
 
செறிந்தது மற்று அவன் திருக் கரத்தினிலே
வெல்லவைக் கதிர்வேல் விழிபடைத்து அருளும்
வல்லவை தனைத்தன் மனை என மணந்தே
ஓகையோடு எழுந்து ஆங்கு உயர்படை சூழ
வாகையும் புனைந்து வரும் வழி தன்னிற்
கருச்சங் கோட்டிக் கயல் கமுகு ஏறும்
திருச்செங் காட்டிற் சிவனை அர்ச்சித்துக்
கணபதீச் சுரம் எனுங் காரண நாமம்
கணபதி புகழ்தரு பதிக்கு உண்டாக்கிச்
சங்கரன் பார்ப்பதி தனிமன மகிழ      240
 
இங்குவந்து அன்புடன் எய்திய பின்னர்க்
கணங்களுக்கு அரசாய்க் கதிர்முடி சூட்டி
இணங்கிய பெருமை பெற்று இருந்திட ஆங்கே
தேவர்கள் முனிவர் சித்தர் கந்தருவர்
யாவரும் வந்து இவன் ஏவல் செய்திடுநாள்
அதிகமாய் உரைக்கும் ஆவணித் திங்களின்
மதிவளர் பக்கம் வந்திடு சதுர்த்தியில்
விநாயகற் குரிய விரதமென்று என்றெண்ணி
மனாதிகள் களித்து மரபொடு நோற்றார்
இப்படி நோற்றிட் எண்ணிய பெறுநாள் 250
 
ஒப்பரும் விரதத்து உறும் ஒரு சதுர்த்தியில்
நோற்று நற்பூசை நுடங்காது ஆற்றிப்
போற்றி செய்திட்டார் புலவர் ஐங்கரனை
மருமலர் தூவும் வானவர் முன்னே
நிருமலன் குமரன் நிருத்தம் புரிந்தான்
அனைவருங் கைதொழுது அடிஇணை போற்ற
வனைகழற் சந்திரன் மனச்செருக்கு அதனால்
பேழைபோல் வயிறும் பெருத்த காத்திரமும்
தாழ்துளைக் கையும் தழைமுறச் செவியும்
கண்டனன் நகைத்தான் கரிமுகக் கடவுளும்   260
 
கொண்டனன் சீற்றம் குபேரனை நோக்கி
என்னைக் கண்டு இங்கு இகழ்ந்தனை சிரித்தாய்
உன்னைக் கண்டவர் உரைக்கும் இத்தினத்திற்
பழியொடு பாவமும் பலபல விதனமும்
அழிவும் எய்துவர் என்று அசனிபோற் சபித்தான்
விண்ணவர் எல்லாம் மிகமனம் வெருவிக்
கண்ணருள் கூருங் கடவுள் இத் தினத்திற்
கோரவெஞ் சினமிகக் கொண்டனன் அந்நாள்
மார்கழித் திங்கண் மதிவளர் பக்கஞ்
சதயந் தொட்ட சட்டிநல் விரதமென்   270
 
இதயத்து எண்ணி யாவரும் நோற்றார்.
இப்புவி மாந்தர் இயம்பிய விரதம்
வைப்புடன் நோற்ற வகை இனிச் சொல்வாம்
குருமணி முடிபுனை குருகுலத்து உதித்த
தருமனும் இளைய தம்பி மார்களும்
தேவகி மைந்தன் திருமுக நோக்கி
எண்ணிய விரதம் இடையூ றின்றிப்
பண்ணிய பொழுதே பலிப்பு உண் டாகவுஞ்
செருவினில் எதிர்ந்த செறுநரை வென்று
மருமலர்ப் புயத்தில் வாகை சூடவும்   280
 
எந்தத் தெய்வம் எவ்விரதத்தை வந்தனை
செய்யில் வருநமக்கு உரையெனப்
பாட்டுஅளி துதையும் பசுந்துழாய் மார்பனுங்
கேட்டருள் வீர் எனக் கிளர்த்த லுற்றான்
அக்கு நீறணியும் அரன்முதல் அளித்தோன்
விக்கினந் தீர்க்கும் விநாயக மூர்த்தி
ஓடவைத் திடும்பொன் ஒத்துஒளி விளங்கும்
கோடி சூரியர்போற் குலவிய மேனியன்
கடகரி முகத்தோன் காத்திரம் பெருத்தோன்
தடவரை போலுஞ் சதுர்ப்புய முடையோன்   290
 
சர்வா பரணமுந் தரிக்கப் பெற்றவன்
உறுமதிக் குழவிபோ லொருமருப் புடையோன்
ஒருகையில் தந்தம் ஒருகையிற் பாசம்
ஒருகையின் மோதகம் ஒருகையிற் செபஞ்செய்
உத்தம மாலையோன் உறு நினைவின்படி
சித்தி செய்வதனாற் சித்தி விநாயகன்
என்று இமையவரும் யாவருந் துதிப்ப
நன்றி தரும் திருநாமம் படைத்தோன்
புரவலர்க் காணப் புறப்படும் போதும்
செருவினில் யுத்தஞ் செய்திடும் போதும்     300
 
வித்தி யாரம்பம் விரும்பிடும் போதும்
உத்தி யோகங்கள் உஞற்றிடும் போதும்
ஆங்கவன் தன்னை அருச்சனை புரிந்தாற்
தீங்கு உறாது எல்லாஞ் செயம் உண்டாகும்
கரதலம் ஐந்துக் கணபதிக்கு உரிய
விரதமொன்று உளதை விரும்பி நோற்றவர்க்குச்
சந்ததி தழைத்திடுஞ் சம்பத் துண்டாம்
புந்தியில் நினைந்த பொருள்கை கூடும்
மேலவர் தமையும் வென்றிட லாமெனத்
தேவகி மைந்தன் செப்பிடக் கேட்டு    310
 
நுவலரும் விரதம் நோற்றிடும் இயல்பும்
புகர்முகக் கடவுளைப் பூசை செய்விதமும்
விரித்தெமக்கு உரைத்திட வேண்டுமென்று இரப்ப
வரைக்குடை கவித்தோன் வகுத்துரை செய்வான்
தேருநீர் ஆவணித் திங்களின் மதிவளர்
பூர்வ பக்கம் புணர்ந்திடு சதுர்த்தியின்
முந்தும் புலரியின் முறை நீர் படிந்து
சந்தி வந்தனந் தவறாது இயற்றி
அத்தினம் அதனில் ஐங்கரக் கடவுளைப்
பத்தியோடு அர்ச்சனை பண்ணுதல் வேண்டும் 320
 
வெள்ளியாற் பொன்னால் விளங்கும் அவன் தன்
ஒள்ளிய அருள் திரு உருவுண்டாக்கிப்
பூசனை புரியப் புகன்றனர் பெரியோர்
ஆசுஇலா மண்ணால் அமைத்தலுந் தகுமால்
பூசனஞ் செயுமிடம் புனித மாக்கி
வாசமென் மலரின் மஞ்சரி தூக்கிக்
கோடிகம் கோசிகம் கொடி விதானித்து
நீடிய நூல்வளை நிறைகுடத்து இருத்தி
விந்தைசேர் சித்தி விநாயகர் உருவைச்
சிந்தையில் நினைந்து தியானம் பண்ணி     330
 
ஆவா கனம் முதல் அர்க்கிய பாத்தியம்
வாகார் ஆச மனம் வரை கொடுத்து
ஐந்து அமிர்தத்தால் அபிடேகித்துக்
கந்தம் சாத்திக் கணேச மந்திரத்தால்
ஈசுர புத்திரன் என்னும் மந்திரத்தால்
மாசு அகல் இரண்டு வத்திரஞ் சாத்திப்
பொருந்து உமை சுதனாப் புகலு மந்திரத்தால்
திருந்தும் பளிதத் தீபங் கொடுத்துப்
பச்சறுகுடன் இருபத்தொரு விதமாய்
பத்திர புஸ்பம் பலபல கொணர்ந்தே    340
 
உமாசுதன் கணாதிபன் உயர்கரி முகத்தோன்
குமார குரவன் பாசாங் குசகரன்
ஏக தந்தன் ஈசுர புத்திரன்
ஆகு வாகனன் அருள்தரு விநாயகன்
சர்வ காரியமுந் தந்தருள் புரிவோன்
ஏரம்ப மூர்த்தி என்னும் நாமங்களால்
ஆரம்பத்துடன் அர்ச்சனை பண்ணி
மோதகம் அப்பம் முதற் பணிகாரம்
தீது அகல் மாங்கனி தீங்கதலிப்பழம்
வருக்கை கபித்த மாதுளங் கனியொடு 350
 
தரித்திடு நெட்டிலைத் தாழைமுப் புடைக்காய்
பருப்புநெய் பொரிக்கறி பால்தயிர் போனகம்
விருப்புள சுவைப்பொருள் மிகவும் முன்வைத்து
உருத்திரப்பிரியன் என்று உரைக்கும் மந்திரத்தால்
நிருந்தன் மகற்கு நிவேதனங் கொடுத்து
நற்றவர் புகன்ற நானான்கு உபசாரமும்
மற்றவன் திருவுளம் மகிழ்ந்திடச் செய்து
எண்ணுந் தகுதி இருபிறப் பாளர்க்கு
உண் அறு சுவைசேர் ஓதனம் நல்கிச்
சந்தன முத்துத் தானந் தக்கிணை      360
 
அந்தணர்க்கு ஈந்திட்டு அருச்சகன் தனக்குத்
திருத்தகும் விநாயகத் திருவுருவத்தைத்
தரித்த வத்திரத்துடன் தானமாக் கொடுத்து
நைமித்திகம் என நவில்தரு மரபால்
இம்முறை பூசனை யாவர் செய்தலும்
எண்ணிய கருமம் யாவையும் முடிப்பர்
திண்ணிய செருவிற் செயம்மிகப் பெறுவர்
அரன் இவன் தன்னை முன் அர்ச்சனை பண்ணிப்
புரமொரு மூன்றும் பொடிபட எரித்தான்
உருத்திரன் இவனை உபாசனை பண்ணி     370
 
விருத்திரா சுரனை வென்று கொன்றிட்டான்
அகலிகை இவன்தாள் அர்ச்சனை பண்ணிப்
பகர்தருங் கணவனைப் பரிவுட னடைந்தாள்
தண்ணார் மதிமுகத் தாள் தமயந்தி
அன்னான் இவனை அர்ச்சனை பண்ணி
நண்ணார் பரவு நளனை அடைந்தாள்
ஐங்கரக் கடவுளை அர்ச்சனை பண்ணி
வெங்கத நிருதரை வேரறக் களைந்து
தசரதன் மைந்தன் சீதையை அடைந்தான்
பகிரதன் என்னும் பார்த்தி இவன் இவனை    380
 
மதிதலந் தன்னின் மலர்கொடு அர்ச்சித்து
வரநதி தன்னை வையகத்து அழைத்தான்
அட்ட தேவதைகளும் அர்ச்சித்து இவனை
அட்ட போகத்துடன் அமிர்தமும் பெற்றார்
உருக்மணி என்னும் ஒண்டொடி தன்னைச்
செருக்கொடு வவ்விச் சிசுபாலன் தான்
கொண்டு போம் அளவிற் குஞ்சர முகனை
வண்டு பாண்மிழற்றா மலர்கொடு அர்ச்சித்துத்
தாரியின் மறித்தவன் தனைப்புறங் கண்டு
யாமும் அங்கு அவளை இன்புறப் பெற்றோம்       390
 
புகர்முகக் கடவுளைப் பூசனை புரிந்து
மிகமிக மனத்தில் விளைந்தன பெற்றார்
இப்புவி தன்னில் எண்ணிலர் உளரால்
அப்படி நீவிரும் அவனை அர்ச்சித்தால்
எப்பொருள் விரும்பினீர் அப்பொருள் பெறுவீர்
என்று கன்றெரிந்தோன் எடுத்திவை உரைப்ப
அன்றுமுதல் தருமனும் அனுசரும் இவனைப்
பூசனை புரிந்து கட்புலன் இலான் மைந்தரை
நாசனம் பண்ணி நராதிபர் ஆகிச்சிந்தையில்
நினைத்தவை செகத்தினிற் செயங்கொண்டு   400
 
அந்தமில் செல்வத்து அரசியல் பெற்றார்.
ஈங்கு இது நிற்க இவ்விரதத்து இயல்
ஓங்கிய காதை மற்றொன்று உரை செய்வாம்
கஞ்சநான் முகன் தரும் காசிபன் புணர்ந்த
வஞ்சக மனத்தாள் மாயை தன் வயிற்றிற்
சூரன் என்று ஒருவனுந் துணைவருந் தோன்றி
ஆர்கலி சூழ்புவி அனைத்தையும் அழித்தே
சீருடைச் சுவர்க்கத் திருவளங் கெடுத்தும்
புரந்தரன் முதலிய புலவரை வருத்தியும்
நிரந்தரந் தீய நெறி நடத்துதலால்      410
 
ஆயிரங் கண்ணனும் அமரரும் முனிவரும்
நீ இரங்கு எமக்கென நெடுங்கரங் கூப்பி
இரசத கிரிஉறை இறைவனை வணங்கி
வரமிகுஞ் சூரன் வலிமைகள் உரைக்கச்
சுடர்விடு மணிமுடிச் சூரனை வெல்லக்
கதிர்விடு வடிவேல் கரதலத்து ஏந்தும்
புதல்வனைத் தருவோம் போமின் நீர்
என அமரர் கோனுக்கு அரன்விடை கொடுத்துச்
சமரவேல் விழித் தையலுந் தானுங்
கூடிய கலவியிற் கூடாது ஊடலும்    420
 
ஓடிய வானோர் ஒருங்குடன் கூடிப்
பாவகன் தன்னைப் பரிவுடன் அழைத்துச்
சூரன் செய்யுந் துயரம் எல்லாம்
ஊர் அரவு அணிந்தோற்கு உரையென உரைப்பக்
காமனை எரித்த கடவுள் என்றஞ்சிப்
பாவகன் பயமுறப் பயமுனக்கு ஏதென
உற்றிடுங் கரத்தலத்து உன்னையே தரித்தான்
நெற்றியின் நயனமும் நீயே ஆதலிற்
குற்றம் அடாது கூறுநீ சென்றென
வானவர் மொழிய மற்றவன் தானுந்   430
 
தானும் அச் சபையில் தரியாது ஏகி
எமை ஆளுடைய  உமையாளுடனே
அமையா இன்பத்து அமர்ந்து இனிது இருந்த
பள்ளி மண்டபம் பாவகன் குறுகலும்
ஒள்ளிய மடந்தை ஒதுங்கி நாணுதலுந்
தெள்ளிதிற் பரமனுந் தேயுவைக் கண்டே
ஆறுமுகப் பிள்ளையை அவன் கையில் ஈதலும்
வறியவன் பெற்ற வான்பொருள் போலச்
சோதி நீண்முடிச் சுடரோன் கொணர்ந்து
வாத ராசன் மலர்கையிற் கொடுப்ப    440
 
நீதி யோடு நின்று கையேந்திப்
போத நீள் வாயுவும் பொறுக்க ஒண்ணாமல்
தரும்புனற் கங்கை தன்கையில் கொடுப்பத்
தரும்புனற் கங்கையுந் தாங்கவொண்ணாமற்
பொருந்திரைச் சரவணப் பொய்கையில் வைப்பத்
தண்ஆர் வதனத் தாமரை ஆறுங்
கண் ஆறு இரண்டும் கரம் ஈராறும்
தூண் எனத் திரண்ட தோள் ஈராறும்
மாண் அயில் ஆதி வான்படை யுங்கொண்டு
அறுமுகக் கடவுள் அங்கு அவதரித் திடலும்  450
 
மறுகிய உம்பர் மகிழ்ந்து உடன்கூடி
அறுமீன் களைப்பால் அளித்தீர் என்று அனுப்ப
ஆங்கவர் முலையுண்டு அறுமுகன் தானும்
ஓங்கிய வளர்ச்சி உற்றிடும் நாளில்
விமலனும் உமையும் விடையுகைத்து ஆறு
தலைமகன் இருந்த சரவணத்து அடைந்து
முருகுஅலர் குழல் உமை முலைப்பால் ஊட்ட
இருவரும் இன்பால் எடுத்து எடுத்து அணைத்துத்
தேவர் தம்படைக்குச் சேனா பதியெனக்
காவல்கொண்டு அளிக்கக் கதிர்முடி சூட்டி    460
 
அயில்வேல் முதற்பல ஆயுதங் கொடுத்துத்
திசையெலாஞ் செல்லுந் தேருமொன்று உதவிப்
பூதப் படைகள் புடைவரப் போய் நீ
ஓதுறும் அவுணரை ஒறுத்திடு என்றனுப்ப
இருளைப் பருகும் இரவியைப் போலத்
தகுவரென்று அவரைச் சமரிடை முருக்கிக்
குருகுபேர் பெறுங் குன்றமுஞ் சூரன்
மருமமுந் துளைபட வடிவேல் விடுத்தே
யாவரும் வியப்புற இந்திரன் மகளாந்
தேவகுஞ் சரியைத் திருமணம் புணர்ந்திட்டு  470
 
அமரர் கோனுக்கு அமருலகு அளித்துக்
குமர வேளுங் குவலயம் விளங்க
அமரா வதியில் அமர்ந்து இனிது இருந்தான்
சமர வேலுடைச் சண்முகன் வடிவுகண்டு
அமரர் மாதர் அனைவரும் மயங்கி
எண்டருங் கற்பினை இழந்தது கண்டே
அண்டர் எல்லாம் அடைவுடன் கூடி
மாதொரு பாகனை வந்து அடி வணங்கி
மருமலர்க் கடம்பன் எம் மாநகர் புகாமல்
அருள்செய வேண்டும் நீ அம்பிகா பதியென  480
 
இமையவர் உரைப்ப இறையவன் தானுங்
குமரனைக் கோபங் கொண்டுமுன் முனியக்
காவல்கொண்டு எம்வினை கட்டறுத்து அருளுஞ்
சேவலங் கொடியோன் தேசம் போகத்
திருந்திழை உமையாள் அருந்துயர் எய்தி
வருந்தி முன்னிற்க மங்கையைப் பார்த்து
மங்கை நீ தான் வருந்துதல் ஒழிகுதி
அங்கையாற் சூதெறிந்து ஆடுவோம் வாவென
வென்றதுந் தோற்றதும் விளம்புவார் யாரெனக்
குன்றமென் முலையாள் கூறிய சமயம்      490
 
புற்றுஅரவு அணிந்த புனிதனைக் காண அங்கு
உற்றனன் திருமால் ஊழ்வினை வலியாற்
சக்கிர பாணியைச் சான்றெனக் குறித்து
மிக்கதோர் சூது விருப்புடன் ஆடச்
சாயக நேருந் தடநெடுங் கருங்கண்
நாயகி வெல்ல நாயகன் தோற்ப
இன்பவாய் இதழ் உமையான் வென்றேன் என
எம்பெருமானும் யான்வென்றேன் என
ஒருவர்க் கொருவர் உத்தரம் பேசி
இருவருஞ் சாட்சியம் இவனைக் கேட்ப 500
 
மாமனை வதைத்த மால்முகம் நோக்கிக்
காமனை எரித்தோன் கண்கடை காட்ட
வென்ற நாயகி தோற்றாள் என்றுந்
தோற்ற நாயகன் வென்றான் என்றும்
ஒன்றிய பொய்க்கரி உடன் அங்கு உரைப்பக்
கன்றிய மனத்தொடு கவுரி அங்கு உருத்து
நோக்கி நீ இருந்தும் நுவன்றிலை உண்மை
வாக்கினில் ஒன்றாய் மனத்தினில் ஒன்றாய்
மைக்கரி யுரித்தோன் வதனம் நோக்கிப்
பொய்க்கரி உரைத்த புன்மையினாலே  510
 
கனலென வயிற்றிற் கடும்பசி கனற்ற
நிலமிசைக் குருட்டு நெட்டுடற் பாம்பாய்க்
கடகரி முகத்துக் கடவுள் வீற்றிருக்கும்
வடதரு நீழலிற் கிடவெனச் சபித்தாள்
முளரிகள் பூத்த முகி்ல் நிறத்து உருப்போய்த்
துளவு அணி மருமனுந் துணை விழியிழந்தே
ஆண்டு அரைக் கணத்தில் ஆயிரம் யோசனை
நீண்டபைப் பாந்தள் நெட்டுடல் எடுத்து
வளர்மருப்பு ஒன்றுடை வள்ளல் வீற்றிருக்கும்
கிளர்சினை ஆலின் கீழ்க்கிடந் தனனால் 520
 
திரிகடக் கரியின் திருமுகக் கடவுளும்
வழிபடும் அடியார் வல்வினை தீர்த்தே
எழில்பெறு வடமரத்தின் கீழ் இருந்தான்
கம்ப மாமுகத்துக் கடவுள் தன் பெருமையை
அம்பு வியோருக்கு அறிவிப்போம் என
உம்பர் உலகத்து ஓர் எழு கன்னியர்
தம்பநூல் ஏணியில் தாரணி வந்து
கரிமுகக் கடவுளைக் கைதொழுது ஏத்திக்
கார்த்திகைக் கார்த்திகைக் கழிந்த பின்னாளில்
ஆர்த்த கலிங்கத்து அணியிழை வாங்கி 530
 
இருபத்தோர் இழை இன்புறக் கட்டி
ஒருபோது உண்டி உண்டு ஒரு மனமாய்
வேதத்து ஆதியும் பூமியில் எழுத்தும்
ஆதி விநாயகற்கு ஆன எழுத்தும்
மூன்றெழுத்து அதனால் மொழிந்த மந்திரமும்
தேன்தருங் குழலியர் சிந்தையுட் செபித்தே
உரைதரு பதினாறு உபசாரத்தால்
வரைமகள் மதலையை வழிபாடு ஆற்றி
இருபது நாளும் இப்படி நோற்று
மற்றை நாள் ஐங்கர மாமுகன் பிறந்த 540
 
அற்றைநாள் சதயமும் ஆறாம் பக்கமுஞ்
சேரும் அத் தினத்தில் தெளிபுனல் ஆடி
வாரண முகத்தோன் வதிபெருங் கோயில்
சீர்பெற மெழுகித் திருவிளக் கேற்றிக்
குலவுபொற் கலைகள் கொடு விதானித்து
உலர்பல தொடுத்திடு மாலைகள் ஆற்றிக்
கொலைபுரி வடிவேற்கு கற்குமுன் வருகை
மலைமுகக் கடவுளை மஞ்சனம் ஆட்டிப்
பொற்கலை நன்னூற் பூந்துகில் சாத்திச்
சொற்பெறு சந்தனச் சுகந்தம் பூசிக்     550
 
செருந்தி சண்பகஞ் செங்கழு நீரொடு
குருத்து மல்லிகை கோங்கொடு பிச்சி
கருமுகை புன்னை கடிகமழ் பாதிரி
மருவிரி ஞாழல் மகிழ் இரு வாட்சி
தாமரை முல்லை தழையவில் கொன்றை
பூமலர் நொச்சி பூத்தமைக் குவளை
காந்தள் ஆத்தி கடம்பு செவ்வந்தி
வாய்ந்த நல்எருக்கு மலர்க்கர வீரம்
பச்சிலை நொச்சி படர்கொடி அறுகு
முத்தளக் கூவிளம் முதலிய சாத்தித்  560
 
தூப தீபங்கள் சுகம்பெறக் கொடுத்தே
அப்பம் மோதகம் அவல் எள்ளுருண்டை
முப்பழந் தேங்காய் முதிர்முழுக் கரும்பு
தேனுடன் சர்க்கரை செவ்விள நீருடன்
பால்நறு நெய்தயிர் பருப்புடன் போனகங்
கற்பகக் கடவுள் களித்திடத் திருமுன்
பொற்புறப் படைத்துப் பூசனை பண்ணி
நோற்பது கண்டு நோலாது இருந்த
பாப்புரு வாகிய பஞ்சா யுதனும்
யாப்புறு கொங்கையீர் யானும் நோற்பேன் என      570
 
ஆங்கு அவன் தனக்கும் வேண்டுவது அளித்துப்
பாங்கொடு இவ்விரதம் பரிந்து நோற்பித்தார்
அண்டர் நாயகனாம் ஐங்கரன் அருளால்
விண்டுவும் பண்டுஉள வேடம் பெற்றே
உஞ்சைமா நகர்புகுந்து உமையொடு
விமலன் கஞ்சநாள் மலர்ப்பதங் கைதொழு திடலும்
பஞ்சிமென் சீறடிப் பார்ப்பதி நெஞ்சின்
வெஞ்சினம் மிகுந்து விமலனை நோக்கி
யானிடுஞ் சாபம் நீங்கியது ஏதென
மானெடுங் கண்ணி மணிக்கதவு அடைப்ப    580
 
இறையவன் இதற்குக் காரணம் ஏதென
மறிகடல் துயிலும் மாயவன் உரைப்பான்
பிறைமருப்பு ஒன்றுடைப் பிள்ளை அன்று
எனக்குத் தந்தருள் புரிந்த தவப்பயன் ஈதெனச்
சிந்தை மகிழ்ந்து தேவர் தேவனும்
பூங்கொடி அடைத்த பொன்தாழ் நீங்கச்
சாங்குமுன் உரைத்த சக்கர பாணி
இக்கதை சொல்ல அக்கணி சடையனும்
மிக்கநல் விரதம் விருப்புடன் நோற்றபின்
மாதுஉமை அடைந்த வன்தாழ் நீக்கி   590
 
நாதனை நணுகிட நம்பனும் நகைத்தான் 
தானோ வந்தது நகையானது எனத் 
தேன்நேர் மொழியாள் தெளியக் கூறென 
நன்மதி நுதலாய் நானிலந் தன்னில் 
உன்மகன் நோன்பின் உறுதி அறிந்து 
சிந்தை மகிழ்ந்து சிரித்தேன் யானென 
அந்தமில் அரனை ஆயிழை வணங்கிப் 
பொருஞ் சூர் அறவேல் போக்கிய குமரன் 
வரும்படி யானும் வருத்தி நோற்பேனென 
இறையவன் கதைசொல ஏந்திழை நோற்றபின் 600 
குறமட மகளைக் குலமணம் புரிந்தோன். 
சுடர்வடி வேலோன் தொல்வினை தீர்ந்து 
தாதுமை வண்டு உழுந்தாமத் தாமனை 
மாதுமை யாளை வந்து கண்டனனே
கண்ண நீ கண்ணிலாக் கட்செவி ஆகுஎனக்
தண்நறுங் குழலுமை சாபமிட்டதுவும்
அக்கு நீறணியும் அரன்முதல் அளித்த
விக்கின விநாயகன் விரதம் நோற்று அதன்பின்
சுடர்க்கதை ஏந்துந் துளவ மாலையன்
விடப்பணி உருவம் விட்டு நீங்கியதும், 610
பவுரிகொள் கூத்துடைப் பரமனும் நோற்றுக் 
கவுரி அன்று அடைத்த கபாடந் திறந்ததும், 
வாசமென் குழலுடை மாதுமை நோற்பத் 
தேசம் போகிய செவ்வேள் வந்ததும், 
வானவர் நோற்று வரங்கள் பெற்றதும், 
நாரத முனிவன் நவின்றிடக் கேட்டே 
இந்நிலந் தன்னில் இவ்விரதத்தை 
மன்னவன் வச்சிர மாலிமுன் நோற்றுக் 
காயத் தெழுந்த கடும்பிணி தீர்த்து 
மாயிரும் புவியின் மன்னனாய் வாழ்ந்து 620 
தடமுலைத் திலோத்தமை தனைமணம் புரிந்து 
மழவிடை போற்பல மைந்தரைப் பெற்றுக்
கடைமுறை வெள்ளியங் கயிலையில் உற்றான் 
பரிவொடு இவ்விரதம் பாரகந் தன்னில் 
விரைகமழ் நறுந்தார் விக்ர மாதித்தன் 
மறிகடற் புவிபெற வருந்தி நோற்றிடுநாள் 
மற்றவன் காதல் மடவரல் ஒருத்தி 
இற்றிடும் இடையாள் இலக்கண சுந்தரி 
மெத்த அன்புடன் இவ் விரதம் நோற்பேனென 
அத்தந் தன்னில் அணியிழை செறித்துச் 630
சித்தம் மகிழ்ந்து சிலநாள் நோற்றபின் 
உற்ற நோன்பின் உறுதி மறந்து 
கட்டிய இழையைக் காரிகை அவிழ்த்து 
வற்றிய கொவ்வையின் மாடே போட 
ஆங்கு அது தழைத்தே அலருந் தளிருமாய்ப் 
பாங்குற ஓங்கிப் படர்வது கண்டு 
வேப்பஞ் சேரியிற் போய்ச் சிறையிருந்த 
பூப்பயில் குழல்சேர் பொற்றொடி யொருத்தி 
அவ்வியம் இல்லாள் அவ்விடந் தன்னிற் 
கொவ்வை அடகு கொய்வாள் குறுகி 640
இழையது கிடப்பக் கண்டு அவள் எடுத்துக் 
குழைதவிழ் வரிவிழிக் கோதை கைக்கட்டி 
அப்பமோடு அடைக்காய் அவைபல வைத்துச் 
செப்பமுடனே திருந்திழை நோற்றிடக் 
கரிமுகத்து அண்ணல் கருணை கூர்ந்து 
பண்டையில் இரட்டி பதம் அவட்கு அருள 
கொண்டுபோய் அரசனுங் கோயிலுள் வைத்தான் 
விக்கிர மாதித்தன் விழிதுயில் கொள்ள 
உக்கிரமான உடைமணி கட்டித் 
தண்டையுஞ் சிலம்புத் தாளினின்று ஒலிப்பக் 650
கொண்டல் போல்வருங் குஞ்சர முகத்தோன் 
மனமிகக் கலங்கு மன்னவன் தன்னிடங் 
கனவினில் வந்து காரண மாக 
இலக்கண சுந்தரி இம்மனை இருக்கிற்
கலக்கம் வந்திடுங் கழித்திடு புறத்தெனத்
துண்ணென எழுந்து துணைவியை நோக்கிக்
கண்ணுறக் கண்ட கனவின் காரணம்
அண்ணல் உரைத்திடும் அவ்வழி தன்னில்
ஆனை குதிரை அவைபல மடிவுற
மாநகர் கேடுறும் வகையது கண்டு 660
இமைப்பொழுது இவள் இங்கு இருக்கலாகாது என 
அயற் கடை அவனும் அகற்றிய பின்னர் 
வணிகன் தனது மனைபுகுந்து இருப்ப 
மணியும் முத்தும் வலிய கல்லாய்விட 
அணியிழை தன்னை அவனும் அகற்ற 
உழவர் தம்மனையில் உற்று அவள் இருப்ப 
வளர்பயிர் அழிந்து வளம்பல குன்ற 
அயன்மனை அவரும் அகற்றிய பின்னர்க் 
குயவன் மனையிற் கோற்றொடி செல்லக் 
குயக்கலம் உடைந்து கொள்ளை போக 670
அயற்கடை அவனும் அகற்றிய பின்னர்த்
தூசுதூய்து ஆக்குந் தொழிலோர் மனைபுகத் 
தூசுகளெல்லாந் துணிந்து வேறாகத் 
தூசரும் அவளைத் தூரஞ் செய்ய 
மாலைக் காரன் வளமனை புகலும் 
மலை பாம்பாம் வகையது கண்டு 
ஞாலம் எல்லாம் நடுங்கவந்து உதித்தாய்
சாலவும் ‘பாவிநீ தான்யார்?’ என்ன
வெம்மனம் மிகவும் மேவி முனிவுறா
அம்மனை அவனும் அகற்றிய பின்னர் 680
அவ்வை தன்மனை அவள் புகுந்திருப்ப 
அவ்வை செல்லும் அகங்கள் தோறும்
வைதனர் எறிந்தனர் மறியத் தள்ளினர் 
கைகொடு குத்தினர் கண்டோர் பழித்தனர்
அவ்வை மீண்டும் தன் அகம் அதிற்சென்று 
இவ்வகைக் கன்னி நீ யாரென வினாவக் 
காத்தாண்டு உலகு கருணையோடு ஆண்ட 
மார்த்தாண்ட ராசன் மாமகள் ஒருத்தி
எல்லார்க்கும் மூத்தாள் இலக்கண சுந்தரி 
சொல்லும் விக்கிரம சூரியன் மனையெனச் 690 
சீர்கெட இருந்த தெரிவையை நோக்கி 
நீரது கொண்டு நிலம் மெழுகிடுக எனச்
சாணி எடுக்கத் தையலுஞ் சென்றாள் 
சாணியும் புழுத்துத் தண்ணீர் வற்றிப் 
பேணிய புழுவாய்ப் பெரிது தோன்ற 
மானேர் விழியாள் வருந்துதல் கண்டு 
தானே சென்று சாணி எடுத்துத் 
தண்ணீர் கொணர்ந்து தரை மெழுக்கிட்டு 
மண்ணிய வீட்டில் மணிவிளக்கு ஏற்றிப் 
புத்தகம் எடுத்து வாவெனப் புகலப் 700 
புத்தகம் பாம்பாய்ப் பொருந்தி நின்றாட 
மெத்தஉள் நடுங்கி வீழ்ந்தவள் கிடப்பக் 
கொவ்வையங் கனிவாய்க் கோதையை விலக்கி 
அவ்வை தானே அகமதிற் சென்று 
புத்தக எடுத்துப் பொருந்தப் பார்த்து 
வித்தக நம்பி விநாயக மூர்த்தி 
கற்பகப் பிள்ளைசெய் காரியம் இதுவென 
உத்தமி அவ்வை உணர்ந்து முன்அறிந்து 
தவநெறி பிழைத்த தையலை நோக்கி 
துவலரும் விநாயக நோன்பு நோற்றிடுக எனக் 710 
கரத்து மூஏழு இழைக் காப்புக் கட்டி 
அப்பமும் அவலும் மாம் பல பண்டமுஞ்
செப்ப மதாகத் திருமுன் வைத்தே 
அவ்வை கதைசொல ஆயிழை கேட்டு 
மத்தகக் களிற்றின் மகா விரதத்தை 
வித்தகமாக வியங்கு இழை நோற்றுக் 
கற்பக நம்பி கருணை பெற்றதன் பின், 
சக்கர வாள சைனியத்தோடு 
விக்ர மாதித்தன் வேட்டையிற் சென்று
தானுஞ் சேனையுந் தண்ணீர் விரும்பி 720
எவ்வகை செய்வோம் எனஉளம் மெலிந்தே 
அவ்வை தன்மனை அங்குஅவர் அணுக 
எய்துந் தாகமும் இளைப்புங் கண்டு 
செவ்வே அவற்றைத் தீர்க்க எண்ணி 
இலக்கண சுந்தரி என்பவள் தன்னை 
அப்பமும் நீரும் அரசற்கு அருள்எனச் 
செப்பிய அன்னை திருமொழிப் படியே 
உண்நீர்க் கரகமும் ஒரு பணிகாரமும் 
பண்நேர் மொழியாள் பார்த்திபற்கு உதவ 
ஒப்பறு படையும் உயர்படை வேந்தனும் 730 
அப்பசி தீர அருந்திய பின்னர் 
ஆனை குதிரை அவைகளும் உண்டுந் 
தான்அது தொலையாத் தன்மையைக் கண்டே 
இவ்வகை சமைத்த நீ யாரென வினவ 
அவ்வல் அம் குழலாள் மௌனமாய் நிற்ப 
அவ்வை தான்சென்று அரசற்கு உரைப்பாள்
கணபதி நோன்பின் காரணங் காண் இது 
குணமுடை இவள் உன் குலமனையாட்டி 
இலக்கண சுந்தரி என்று அவ்வை கூற 
மங்கையை நோக்கி மனம்மிக மகிழ்ந்து 740
திங்கள்நேர் வெள்ளிச் சிவிகையில் ஏற்றிக் 
கொண்டுஊர் புகுந்தான் கொற்ற வேந்தனும்
ஒண்தொடி யாரில் உயர்பதம் உதவினன் 
சிந்துர நுதலார் சென்று அடி பணியச் 
சுந்தரி இருந்தாள் சுகத்துடன் மகிழ்ந்தே.745 
 
 
ஆசிரியர்: யாழ்ப்பாணத்திலுள்ள சுன்னாகத்தைச் சேர்ந்த திரு.வரத பண்டிதர்